R.M. Nowsaath இன் முத்திரையிடப்பட்ட மதுவுடன்
பிஸ்தாமி அஹமட்.
காலாகாலமாகியும்
காலமாகாமல் அகாலமாய்
இருக்கும் காலங்குறித்தான
கவிதைகள் தான் இவை
காலமும் அதன் இடைவெளியும்
ஆரம்பமும் குறித்தான கவிதை விபரிப்புகள் இவை
ஷம்ஸ் தப்ரீஸியும்
ரூமியும்
தீரனின் வரிகளுக்கிடையில்
மெல்ல மெல்ல
வந்து போவதான உணர்வு
எழுகிறது.
ஸ்டீபன் ஹோகிங் இன் காலங்குறித்த சுருக்க வரலாறு குறித்த சிக்கலான நூலை விட
காலங்குறித்தான
குறுங்கவிதைகளை
இங்கே
மணக்க மணக்க
பூசி மகிழலாம்
எளிமையாக
சுலபமாக....
"காலத்தின் கைகளை பற்றிக்கொண்டு
காலம் போகும் பாதையில்
என் காலம் போகின்றது"
எனும் முதல்
கவிதையில் தொடங்கி
"இறை வர்ணத்தில் தோய்ந்து
நான்
இன்புறுவது எக்காலம்"
என்றவாறு
காலம் குறித்தான ஏக்கத்துடன்
ஏக்கமெனும் பெருமெதிர்பார்ப்புடன் கூடிய ஏகாந்த கவிதையுடன் முடிகிறது
நூல்
என்று முடிகிறது நூல்
ரூமியின் கவிதைகளை பூசி மகிழும் ஓர் பரமானந்த சுகம் உங்கள் கவி வரிகளிலும் கமகமவென மணக்கிறது.
முத்திரையிடப்பட்ட மது
92
குறுங்கவிதைகளை கொண்ட அழகிய தொகுப்பிது. ஸூ பித்துவ சாயல் நிறைந்த கவிதைகளாகவே இவற்றை நோக்க வேண்டும். முதல் கவிதை காலம் குறித்த கவிதை. ஸூ ரா அல் அஸ்ர் பற்றிய கவிதை எனலாம். அல்லது நானே காலம் என காலம் பற்றி இறைவன் கூறும் வார்த்தைக்கான கவித்துவ வரி எனலாம். காலம் பற்றிய அற்புத வரிகள் அவை. மரண பிடியை மாயப் பறவையாக்கி கவி பாடும் மாயப்பறவை பற்றிய வரிகளும் அபூர்வம். தீரனின் கதைகளும் சிறு கதைகளும் நாவல்களும் மொழியின் கவர்ச்சியை ஈர்ப்பை தன்னகத்தே கொண்டவை. தீரனின் எழுத்தில் மொழியை ரசிப்பதா உள்ளடக்கத்தை ரசிப்பதா என்று தீர்மானிக்க வேண்டியது வாசகன் தான்.
மாமதையகற்ற எரியும் சுடர் குறித்து குழந்தை தரும் பதிலில் குரு நாதரின் அகந்தையும் அறிவுசெருக்கும் இணைந்து அணைந்து விடுகிறது. வாழ்க்கை குறித்த யதார்த்த ஸூபிக்கவிதையாக அடுத்தடுத்த கவிதைகள் உள்ளன. மொத்தத்தில் வாழ்வு ஆயுள் காலம் மனித வாழ்வு இவை பற்றித்தான் கவிதை சுழல்கிறது. இறைவனின் மகத்தான ஆற்றல், மாபெரும் அண்டப் பிரளயம் இவை தான் இங்கு பேசு பொருள்.
ஏகமும் நீ கவிதையில் தீரன் நௌஷாத் ரூமியின் சாயலை பெறுகிறார்.
மொத்தத்தில் முத்திரையிடப்பட்ட மது பருகி மகிழ அனுமதியுள்ளது. அதில் ஆன்மிக பரவசம் மட்டுமே உண்டு
போதை நீக்கம் செய்யப்பட்ட மதுக்கவிதைகளே அவை.....
மதுரக்கவிதைகள்
No comments:
Post a Comment